புதிய வரவுகள் »

புதன், 15 ஜனவரி, 2014

டெசோ! (வ.வா.ச) 2



டெசோ!
(வருத்தப்படாத வாலிபர் சங்கம்)


இன்றுநாம் இங்குக் கூடி
      இருப்பதன் நோக்க மென்ன?
அன்றுநம் கண்ணின் முன்னே
      அழிந்தஈ ழத்தை மீட்கச்
சென்றுநாம் செய்ய வாகும்
      செயல்கள்தான் என்ன என்ன
என்றுநாம் கூடி ஆய
      இருப்பதே நோக்க மன்றோ!

‘புலிகளே போன பின்பு
      புத்தீழம் கனவே’ என்னும்
சலிப்பிலே உழலு கின்ற
      தமிழரே! புலிக ளாலும்
எளிதிலே முடிந்தி டாத
ஈழத்தை வென்று காட்டிக்
களிப்பிலே உம்மை ஆழ்த்தக்
களத்திலே இறங்கி விட்டேன்!  

தலைக்குமேல் வெள்ளம் சூழந்த
      தவிப்பிலே கலங்கும் மக்காள்!
‘இலைக்குமேல் கதிரே’* என்றிங்(கு)
      என்பின்னே அணிவ குத்தால்
களைக்குமேல் களையெ டுத்துக்
      கழனியைச் சீராக் கல்போல்
விலைக்குமேல் விலைகொ டுத்தும்
      வெல்லேனோ ஈழத் தைநான்?

பொறுத்தது போதும் என்று
      பொங்கிநான் எழுந்து விட்டால்
ஒறுத்தது போதும் வாரீர்
      ஓடிடு வோமென் பாரே
சிறுத்தநெஞ் சம்ப டைத்த
      சிங்களக் கடையர்; அந்த

நரித்தனம் எனக்கே யுண்டு
      நானிலம் அறிதல் வேண்டும்!


என்னாட்டுத் தமிழர் காள்!நம்
      இனம்முற்றாய் அழிந்த போதும்
பன்னாட்டு மன்றம் கூடப்
      பதறிட வில்லை; இப்போர்
உண்ணாட்டுச் சிக்கல் என்றே
      உதறிடப் பார்த்தா ரன்றித்
தன்னாட்டுச் சிக்கல் போலத்
      தடுத்திட முனைந்தா ரில்லை;


(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக