புதிய வரவுகள் »

சனி, 11 செப்டம்பர், 2010

விடுதலைசெய்!


நாம்தமிழ ராய்வாழ்ந்தோம் நமைப்பிரித்துத் திரவிடராய்
நலியச் செய்து
தாம்சிறந்தார்; தமிழகத்தில் தமிழர்க்காய்த் தமிழ்க்கழகம்
தழைக்கா வன்னம்
வேம்பனையார் காத்திட்டார் விரைந்தந்நாள் கதிரவனார்
வழியில் சீமான்
நாம்தமிழர் கழகத்தை நனிதொடங்கி நடத்துவதால்
நடுக்குற் றாரே!

நானிலமும் திரவிடமே நடைபோட நத்தியவர்
நம்தம் சீமான்
தானியன்று நாம்தமிழர் தனிக்கழகம் தொடங்கியதால்
தலைக்குத் துற்றே
ஏனிவனும் நாம்தமிழர் எனும்பெயரில் ஓர்கழகம்
எழுப்பு கின்றான்
காணிவனை என்செய்தும் கழகமதை மூடிவிடல்
கடமை என்றார்!

ஊனமனம் மேலோங்க உளக்கரவு கொண்டவிந்த
உணர்வில் லாதார்
ஆனவரை துன்பந்தந் தருந்தலைவன் செயல்முடிக்க
ஆசை கொண்டு
மீனவர்கள் தம்துயரை மேடைதனிற் பேசியதை
மிகையென் றாங்கே
மானமிகு சீமானை மறுவுடையார் சிறைவைத்து
மகிழ்கின் றாரே!

விடுதலைசெய்! நாம்தமிழ வேங்கைதனை; இங்குள்ள
மீன வர்க்குக்
கெடுதலைச்செய் துளங்களிக்குங் கீழான காடையரைக்
கேள்வி கேட்கா
நெடுமரமே! திரவிடமே! நேர்நடுவண் அரசே!உன்
நேர்மை யில்லாக்
கொடியமனப் போக்காலே கொலையுண்டார் ஈழத்தார்
கொடுமை ஈதே!

தமிழ்ச்செருக்கன்

புதன், 23 ஜூன், 2010

கண்ணுறங்கு!


சீராரும் செந்தமிழைச் சீரழிக்க வந்தவனே!
பேராரும் தமிழினத்தைப் பேரிடரில் விட்டவனே!
நீரோடுந் தமிழ்நிலத்தில் நீர்வற்றச் செய்தவனே!
வாராதோ சாவுனக்கு? வரும்வரையில் கண்ணுறங்கு!


தன்குடியே நாடாளத் தக்கதெலாஞ் செய்பவனே!
தன்பெயரில் தொலைக்காட்சி தந்தவனே! மதுக்கடைகள்
பொன்குவிக்கும் இடமென்று போய்திறந்த பெண்ணவளைப்
பின்பற்றி இந்நாட்டைப் பிணக்காடாய்ச் செய்தவனே!

பேணாத ஒழுக்கத்தைப் பேணுவதாய்ப் பறைசாற்றும்
நாணாத நெஞ்சினனே! நாத்தழும்பு கொண்டோனே!
காணாத இனமாகக் கவின்தமிழர் போயொழிய
வீணான செயலையெல்லாம் விரிப்பவனே கண்ணுறங்கு!

தனையெதிர்க்கும் சான்றோரைத் தற்குறிகள் என்பவனே!
உனைநிகர்த்தோன் இல்லையென ஊரைவிட்டே உரைப்பவனே!
தினையளவும் திருந்தாத தீயவனே! மூப்படைந்த
நிணக்குன்றே! இறப்புனக்கு நேரு(ம்)வரை கண்ணுறங்கு!

செவ்வாய், 22 ஜூன், 2010

அழிப்பது தமிழினை ஆம்!



பழுத்தசெந் தமிழதன் பயனுறு மெழுத்தினைக்
கொழுத்தகீழ் விலங்குகள் குறையெனத் திருத்துதல்
ஒழுக்கமில் செயலென ஓது!

கொழுத்தபின் வளைதனில் குடியிரா உயிரிபோல்
செழித்தசெந் தமிழினால் செழிப்பெலாம் அடைந்தபின்
அழிப்பது தமிழினை ஆம்!

கழுத்தினை அறுப்பதும் கடமையோ? தமிழினால்
கொழுத்தபின் தமிழ்க்கொலை புரிவதோ? பிழைத்தவும்
இழுத்துநா அறுத்திடல் ஏற்பு!

தமிழ்ச்செருக்கன்!

வியாழன், 27 மே, 2010

கற்பும், குஷ்பும்!



சொற்பொருத்திச் சோன்னாரே இளங்கோ அன்று
சோலைமகள் கண்ணகியைக் கருத்தில் கொண்டு
நெற்புறத்து முனையளவும் நெறிபி ழையாக்
கற்பதுவே கற்பென்று; இன்றோ இங்கு
கற்பென்றால் என்னவிலை? கேட்கு றாங்க!
கண்ணகியின் உடைமைன்னும் பேசு றாங்க!
நற்றாலி ஏறும்முன் கலவ லாமாம்
நலங்கெடாம ‘காண்ட’மது காக்கு தாமாம்!
தமிழ்ச்செருக்கன்

புதன், 19 மே, 2010

எழுத்துச் சீர்திருத்தம் எனும் சீர்கேடு!


எழுத்துச் சீர்திருத் தம்மெனும் பேரிலே
எழுத்துச் சீர்கெடுத் தின்புறப் பார்க்கிறார்
பழுத்த தீந்தமிழ்ப் பற்றுலார் நாட்டிலே
கொழுத்த இத்தகைக் குக்கலை ஓட்டுவோம்!

பாரில் முன்பதாய்த் தோன்றிய தீந்தமிழ்
நேரொன் றில்லதாய் நின்றுசெ ழித்ததே!
வேரில் தீயினை வைத்ததைத் தீய்க்கவோ
சீரில் லாத்திருத் தஞ்செயப் பார்க்கிறார்?

தன்னை யேபெரும் தக்கறி வாளனாய்
எண்ணி இத்தகைத் தீச்செயல் செய்யிட
உண்ணிப் போந்தரோ? உள்ளுவப் புற்றரோ?
நண்ணி ஆங்கவர் நாவறு தல்நலம்!

காலம் ஆயிரம் தாண்டியே வாழ்கிற
ஞாலத் தாய்மொழி இத்தனை காலமும்
கோலம் மாசுறாக் கொள்கையாற் சீர்மிகுந்(து)
ஆளும் காட்சியை ஆங்கவர் காண்கவே!

சீனத் தில்பல ஆயிர மாயெழுத்(து)
ஆன பொதிலும் அம்மொழி கற்றிட
சீனர் அஞ்சிடார் தீந்தமிழ் கற்றிட
ஏனச் சம்மிக எய்தினீர் செப்புவீர்!

எழுத்தை மாற்றினால் இன்தமிழ் வாழுமாம்
குழந்தை நாடியே கற்குமாம் நத்துமாம்
கிழட்டு நாய்களே நீருமந் நாட்களில்
குழந்தை இல்லையோ? கற்கலை யோதமிழ்?

எழுத்துச் சீர்திருத் தம்மெனும் கேட்டினைப்
பழித்து நீக்குவோம் பைந்தமிழ் வாழவே
அழுத்த மாயிதை ஆற்றுவோம் இங்கவர்
இழுத்த பாதையில் செல்லமா டில்லைநாம்!

தமிழ்ச்செருக்கன்

வியாழன், 11 மார்ச், 2010

காவியும் காமமும்!


நடிகை ரஞ்சிதாவுடனான தொடர்பால் தலைமறைவாக வாழும் நித்தியானந்தா பாடுவதாக அமைந்த பா!


காவியும் காமமும் இரண்டென்பர் அறிவிலார்
காவியே காமமாவ தாரும் அறிகிலார்
காவியே காமமாவ தாரும் அறிந்தபின்
காவியே காமமாய் அமர்ந்திருந் தாரே!

தமிழ்ச்செருக்கன்